உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை ஈடுசெய்யும் வகையில், ஜெர்மனி திங்கள்கிழமை இரவு எரிசக்தி வரியைக் குறைத்துள்ளது. பெப்ரவரி மாத இறுதியில் இதேபோன்ற நடவடிக்கைகளை ஒஸ்ரியா மற்றும் இத்தாலியும் மேற்கொண்டிருந்தன.
சுவிட்சர்லாந்திலும் அதிக எரிபொருள் விலைகள் வாகன ஓட்டிகளுக்கு அதிகளவில் சிரமத்தை ஏற்படுத்துகின்றன.
சுவிஸ் மக்கள் கட்சி பல ஆண்டுகளாக கனிம எண்ணெய் வரியைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், கூட்டாட்சி மன்றத்திற்கு எழுதிய ஒரு திறந்த கடிதத்தில், தேசிய கவுன்சிலர் தோமஸ் நட்டி மற்றும் மற்ற மூன்று சுவிஸ் மக்கள் கட்சி தேசிய கவுன்சிலர்கள் இந்த வரியை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றும் வாதிட்டுள்ளனர்.
“கனிம எண்ணெய் வரி, எரிபொருட்களின் இறுதி விலையில் ஒரு குறிப்பிடத்தக்க அங்கமாக உள்ளது, எனவே இது விரைவான நிவாரணத்திற்கான நேரடி வாய்ப்பை வழங்குகிறது,” என்று அவர்கள் வலியுறுத்தினர்.
எனினும், “இது ஒரு அவசரமான முடிவு,” என்று சுவிஸ் தேசிய மன்றத்தின் மைய-வலதுசாரி உறுப்பினரான மார்ட்டின் கேண்டினாஸ் மறுக்கிறார்.
“நமது உள்கட்டமைப்பிற்கு நிதியளிக்க வரி வருவாய் தேவைப்படுகிறது – மேலும் நல்ல தரத்தை உறுதிப்படுத்த, நாம் நிதி திரட்ட வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.
எஸ்பி தேசிய கவுன்சிலர் டேவிட் ரோத்தும் வரிக்குறைப்பை எதிர்க்கிறார். “நாம் மக்களுக்கு நிவாரணம் வழங்க விரும்பினால், ஒட்டுமொத்தமாக வாங்கும் சக்தியை வலுப்படுத்த வேண்டும்.” கனிம எண்ணெய் வரியைக் குறைப்பது மிகவும் ஒருதலைப்பட்சமாக இருக்கும், ஏனெனில் உயரும் எண்ணெய் விலைகள் மற்ற அனைத்து எரிசக்தி ஆதாரங்களையும் விலை உயர்ந்ததாக மாற்றும். “முழு மக்களுக்கும் பயனளிக்கும் நடவடிக்கைகளை நாம் செயல்படுத்த வேண்டும்.” என அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, கூட்டாட்சி அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்று கருதுகிறது.
தேசிய பொருளாதார விநியோகத்திற்கான கூட்டாட்சி அலுவலகம் (BWL), சுவிட்சர்லாந்தின் அனைத்து பெட்ரோலியப் பொருட்களின் விநியோகமும் தற்போது உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. விலை மாற்றங்களைப் பாதிக்கும் எந்த வழியும் அதனிடம் இல்லை.
மூலம்- 20min

