சூரிச்சிலிருந்து புடாபெஸ்ட் நோக்கி நேற்றுக்காலை 11:25 மணிக்குப் புறப்பட்ட ஸ்விஸ் விமானம் சுமார் 1.5 மணி நேரம் கழித்து, மீண்டும் சூரிச்சில் தரையிறங்கியது.
Flightradar24-இன் தரவுகளின்படி, அந்த ஏர்பஸ் A220 விமானம் முதலில் திட்டமிட்டபடி கிழக்கு நோக்கிப் பறந்தது.
ஒஸ்ரியாவில் உள்ள செல் ஆம் ஸீ-க்கு மேலே பறந்த பின்னர், அந்த விமானம் வடக்கு நோக்கித் திரும்பி ஹங்கேரியை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக, அது மியூனிக்கின் மீது பறந்து, அங்கு சில வட்டமிட்டு, பிற்பகல் 1 மணிக்குச் சற்று முன்பு மீண்டும் சூரிச்சில் தரையிறங்கியது.
விமானம் திரும்பியதற்குக் காரணம், பிரேக்குகள் அதிக வெப்பமடைந்ததைக் குறிக்கும் எச்சரிக்கை விளக்கு எரிந்ததுதான் என்று ஸ்விஸ் நிறுவனம் கூறியது.
சூரிச்சில் நடந்த தொழில்நுட்ப ஆய்வின்போது ஸ்விஸ் நிபுணர்கள் பின்னர் கண்டறிந்தபடி, அந்த எச்சரிக்கை விளக்குக்கான சென்சார் பழுதடைந்திருந்தது. பிரேக்குகள் நன்றாகவே இருந்தன. அதன் பிறகு, அந்த விமானம் மீண்டும் சேவைக்குத் திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விமானத்தின் கொக்பிட் குழுவினர் முதலில் மியூனிக்கிற்குப் பறக்கத் திட்டமிட்டிருந்ததாக ஸ்விஸ் மேலும் தெரிவிக்கிறது.
இருப்பினும், சூரிச்சில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அவர்கள் திரும்பிச் செல்ல முடிவு செய்தனர்.
ஏனெனில், உரிமம் பெற்ற மெக்கானிக்குகளைக் கொண்ட சூரிச் தளத்தின் உள்கட்டமைப்பு, விமானங்களை முழுமையாக ஆய்வு செய்வதற்கும், தேவையான பழுதுபார்ப்புகளை முடிந்தவரை விரைவாக மேற்கொள்வதற்கும் மிகவும் உகந்ததாக இருந்தது.
பணியாளர்களும் பயணிகளும் சூரிச்சில் விமானம் மாறி, சுமார் மூன்று மணி நேரத் தாமதத்துடன் புடாபெஸ்டுக்கான தங்கள் பயணத்தைத் தொடர முடிந்தது.
இந்தத் தாமதத்தால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு ஸ்விஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
மூலம்- swissinfo

