2016-ல் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உலகச் சுற்றுப் பயணத்தை நிறைவுசெய்த, சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் விமானமான ‘சோலார் இம்பல்ஸ் 2’, மெக்சிகோ வளைகுடாவில் விழுந்து நொறுங்கி அழிந்து விட்டது. அந்த விமானத்தில் யாரும் பயணிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019-ல் ஒரு ஸ்பானிய-அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கப்பட்டு, பின்னர் அமெரிக்க கடற்படையால் சோதிக்கப்பட்ட இந்த விமானம், திங்களன்று விழுந்து நொருங்கியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடலில் விழுந்து நொருங்குவதற்கு முன்பு விமானம் தனது சக்தியை இழந்ததாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) கூறியுள்ளது. அது முற்றிலுமாக அழிந்துவிட்டது. அதில் யாரும் பயணிக்கவில்லை, மேலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அந்த விமானம் மே 4, திங்கட்கிழமை அதிகாலையில் மிசிசிப்பியில் உள்ள ஸ்டென்னிஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. அது மெக்சிகோ வளைகுடாவில் உள்ள சென் லூயிஸ் விரிகுடாவில், சர்வதேச கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இறுதி அறிக்கை பின்னர் வெளியிடப்படும்.
சோலார் இம்பல்ஸ் 2, 2015 மார்ச் 9 அன்று அதே நகரத்திலிருந்து புறப்பட்டு, 17 கட்டங்களாக 42,000 கிலோமீட்டர் பயணித்து, நான்கு கண்டங்களைக் கடந்தது.
மணிக்குச் சராசரியாக சுமார் 80 கி.மீ வேகத்தில் பறந்து, 8,500 மீட்டருக்கும் அதிகமான உயரத்தை எட்டிய இந்த விமானத்தில், எடையைக் கட்டுப்படுத்துவதற்காக ஒற்றை இருக்கை கொண்ட கொக்பிட்டில் விமானிகள் சுழற்சி முறையில் அமர்ந்தனர்.
வெறும் 1.5 தொன் எடை இருந்தபோதிலும், இந்த விமானம் ஒரு போயிங் 747 விமானத்தின் இறக்கை அகலத்தைக் கொண்டிருந்தது. அதன் மின்கலன்கள், இறக்கைகளில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 17,000 ஒளிமின்னழுத்த செல்கள் மூலம் இயக்கப்பட்டன.
இந்தத் திட்டத்திற்கு ஏறக்குறைய 170 மில்லியன் பிராங் செலவானது. ஒமேகா, ஏபிபி மற்றும் கூகுள் உள்ளிட்ட புரவலர்கள் இதற்கு ஆதரவளித்ததுடன், சுவிஸ் அரசாங்கத்திடமிருந்தும் ஆதரவைப் பெற்றது.
மூலம்- swissinfo

