நாடாளுமன்ற சேவைகள் எலான் மஸ்க்கின் சமூக ஊடகத் தளமான X- இன் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான பிரேரணை பிரதிநிதிகள் சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மின் லி மார்டி இதுதொடர்பான பிரேரணையை முன்வைத்திருந்தார்.
பிரதிநிதிகள் சபையில் பேசிய அவர், முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X தளம், ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கவும், வெறுப்பையும் வெறுப்புப் பேச்சையும் தூண்டவும் பயன்படுத்தப்பட்டதாகவும், உதாரணமாக, வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டில் நடந்த குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களின் போது பயன்படுத்தப்பட்ட செய்திகளின் தலைப்புகளையும் மேற்கோள் காட்டினார்
2022-ல் மஸ்க் இந்தத் தளத்தைக் கையகப்படுத்தியதிலிருந்து, X தளம் கணிசமாக மாறியுள்ளது என்று மார்டி கூறினார்.
பதிவுகள் மிகவும் தீவிரத்தன்மை வாய்ந்தவையாக மாறியுள்ளன. தவறான தகவல்கள் பரவலாக உள்ளன. அவரது பார்வையில், மஸ்க் இந்த வழியில் “கூட்டத்தைத்” தூண்டிவிட விரும்புகிறார். “இந்த நிகழ்வுகள் தற்செயலானவை அல்ல, மாறாக இது ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாகும்,” என்று மார்டி கூறினார்.
கட்டுப்பாடற்ற பாலியல் பாகுபாடு, வன்முறை, போலி அல்லது புண்படுத்தும் உள்ளடக்கங்களை வழங்கும் க்ரோக் (Grok) என்ற செயற்கை நுண்ணறிவு உரையாடல் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டதால், நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது என்று அவர் கூறினார்.
இந்தத் தளத்தில் தொடர்ந்து இருப்பதன் மூலம், கூட்டாட்சிப் பேரவை X-ஐ சட்டப்பூர்வமாக்குகிறது மற்றும் அனைத்து உள்ளடக்கங்களின் முக்கியத்துவத்தையும் வெளிப்படைத்தன்மையையும் அதிகரிக்க பங்களிக்கிறது என்று மார்டி கூறினார். “இது நாங்கள் ஆதரிக்கும் விவாதக் கலாசாரத்தின் வகையைப் பற்றியதுமாகும்,” என்றும் அவர் கூறினார்.
“தற்போது, இவ்வளவு பரந்த அளவிலான மக்களைச் சென்றடையக்கூடிய ஒப்பிடத்தக்க மாற்று எதுவும் இல்லை,” என்று பிரதிநிதிகள் சபையின் அலுவலகத்தின் சார்பாக, வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்த ரோலண்ட் ரினோ புச்செல் பதிலளித்தார்.
இருப்பினும், நாடாளுமன்ற சேவைகள் இந்த முன்னேற்றங்களை தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்தன. மேலும், தீர்மானத்தின் ஆதரவாளரால் குறிப்பிடப்பட்ட சவால்கள் மற்ற சமூக ஊடக தளங்களிலும் எழுந்தன என்று அவர் கூறினார். எனவே, X-இலிருந்து தனித்து விலகுவது, டிஜிட்டல் தளத்தில் உள்ள இந்த அடிப்படைத் தகவல் தொடர்பு சிக்கல்களைத் தீர்க்காது என்று புச்செல் கூறினார்.
பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்தக் கருத்தைப் பகிர்ந்து கொண்டனர்: கூட்டாட்சிப் பேரவையின் X கணக்குகளைத் தொடர்வதற்கு ஆதரவாக, 119 வாக்குகளும் எதிராக 69 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 11 பேர் வாக்களிக்காமல் இருந்தனர்.
பாராளுமன்ற சேவைகள் 2015 முதல், குழுக்களுக்கான ஒரு தகவல் தொடர்பு வழியாகவும், பாராளுமன்ற ராஜதந்திரம் குறித்த தகவல்களை வழங்கவும், மற்றும் பிரதிநிதிகள் சபையின் தலைமைக்குழுக்கள் முக்கிய நிகழ்வுகளுக்குப் பதிலளிக்க வழிவகை செய்யவும் X-ஐப் பயன்படுத்தி வருகின்றன. அரசாங்கம் மற்றும் பல அரசியல் கட்சிகள், அத்துடன் ஒஸ்ரியா, இத்தாலி மற்றும் பிரான்ஸ் பாராளுமன்றங்கள், மற்றும் ஐரோப்பிய மன்றம் ஆகியவையும் X-ஐப் பயன்படுத்துகின்றன.
மூலம்- swissinfo

