தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தொடர் வான் தாக்குதல்களின் காரணமாக, சுவிட்சர்லாந்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டதாக ஃபைனான்சியல் டைம்ஸ் (FT) செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் காரணமாக, அணுசக்திப் பேச்சுவார்த்தைகளுக்காக லூசெர்ன் ஏரியை ஒட்டியுள்ள பர்கன்ஸ்டாக் ரிசார்ட்டுக்கு ஈரான் தனது தூதுக்குழுவை அனுப்பவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
“கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, லெபனானில் போர் நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் என்பதற்கு ஈரானியர்கள் உத்தரவாதங்களைக் கோரியுள்ளனர், மேலும் மத்தியஸ்தர்கள் தற்போது இந்தப் பிரச்சினையைத் தீர்க்கப் பணியாற்றி வருகின்றனர்,” என்று இவ்விவகாரம் குறித்து அறிந்த ஒரு தூதரக அதிகாரி கூறினார்.
பெய்ரூட் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்கள், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகளை மீண்டும் மீண்டும் சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன; தனது தாக்குதலைத் தொடர்வதில் இஸ்ரேல் காட்டும் பிடிவாதத்தின் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாகத் தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் FT குறிப்பிட்டது.
பேச்சுவார்த்தைகள் குறித்து அறிந்த இரண்டாவது வட்டாரம் ஒன்று, “லெபனான் இல்லை என்றால், ஒப்பந்தம் இல்லை” என்ற தனது உறுதியான நிலைப்பாட்டை ஈரான் கடைப்பிடித்து வருவதாகவும், லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் போர் தொடர்பாக வொசிங்டனிடமிருந்து சலுகைகளைப் பெற முடியும் என்றும் தெஹ்ரான் நம்புவதாகவும் கூறியது.
முதல் தூதரின் கூற்றுப்படி, ஈரானியர்களின் செய்தி இதுதான்: “நாங்கள் [லெபனான் தீவிரவாதக் குழுவான] ஹிஸ்புல்லாவைத் தடுத்து நிறுத்தினோம், அமெரிக்காவால் இஸ்ரேலைத் தடுத்து நிறுத்த முடியாது. அவர்கள் அதைச் செய்யும் வரை நாங்கள் வரமாட்டோம்.” என்பதாகும்.
பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக திங்கட்கிழமைக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது லெபனானின் சூழ்நிலையைப் பொறுத்தது என்றும் இரண்டு வட்டாரங்கள் தெரிவித்தன. ஒத்திவைப்பின் கால அளவு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று மூன்றாவது வட்டாரம் கூறியது.
லெபனான் தீவிரவாதக் குழுவின் “தொடர்ச்சியான போர்நிறுத்த மீறல்களுக்கு” பதிலடியாக, லெபனானில் 80க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் டஜன் கணக்கான ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டதாகவும், பெக்கா பள்ளத்தாக்கு உட்பட வெள்ளிக்கிழமை காலை மேலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அது தெரிவித்தது.
எனினும் நேற்று மாலை இரண்டு தரப்புகளும் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
மூலம்- swissinfo

