ஆராவ் ரேவ் பார்ட்டியில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 22 வயதுடைய இத்தாலிய பெண் ஆவார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் பாஸ்கல் வென்செல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நான்கு இளைஞர்களும் மற்றொரு பெண்ணும் காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

“முதற்கட்ட விசாரணையின்படி, ஆராவ்வில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் காயமடைந்தனர்,” என்று வென்செல் கூறினார். “அவர்களின் வயது 24 முதல் 27 வரை ஆகும்.”
பாதிக்கப்பட்ட அனைவரும் சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்கள்.
இதற்கிடையில், இன்று காலையிலும் காவல்துறை நடவடிக்கை தொடர்ந்தது. ஆராவ் ஷாச்சென் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளை மக்கள் தொடர்ந்து தவிர்க்க வேண்டும் என்றும் காவல்துறை X-ல் அறிவித்துள்ளது.
ஏழாவது ஆராவ் ரேவ் பார்ட்டி நடைபெற்று வந்த, ஆரே ஆற்றங்கரையில் உள்ள ஷாச்சென் பந்தய மைதானத்தில், அதிகாலை 2:30 மணிக்குச் சற்றுப் பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
சனிக்கிழமை மதியம் தொடங்கிய இந்த நிகழ்வை, ஏற்பாட்டாளர்கள் மாகாணத்தின் மிகப்பெரிய ஒருநாள் நிகழ்வாகக் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், இது கிட்டத்தட்ட 3,000 பேரை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடந்தபோது, நிகழ்விடத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது ஞாயிற்றுக்கிழமை காலை வரை தெரியவில்லை.
மாகாண காவல்துறையின்படி, இன்ற அதிகாலை 2:30 மணிக்கு சற்றுப் பிறகு அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டது. பல அவசர சேவைகள், தீயணைப்புப் படை மற்றும் மாகாணத்தின் பேரிடர் மீட்புப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பெரிய அவசரகால நடவடிக்கை தொடங்கப்பட்டது.
சுவிஸ் பொது ஒளிபரப்பு நிறுவனமான SRF மற்றும் பிற ஊடக அறிக்கைகளின்படி, ராணுவத்தின் சூப்பர் பூமா ஹெலிகொப்டரும் பயன்படுத்தப்பட்டது.
காவல்துறையினர் பந்தய மைதானம், நீச்சல் குளம் மற்றும் விளையாட்டு வசதிகளைச் சுற்றியுள்ள ஒரு பெரிய பகுதியைச் சுற்றி வளைத்து, மக்களை விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
ஆராவ் நகரில் உள்ள நீச்சல் குளம் மூடப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிகாரிகள் நகருக்கு அப்பாலும் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தினர்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து 30 கிலோமீட்டர் தூரம் வரை நெடுஞ்சாலைகளில் ஆயுதமேந்திய காவல்துறையினர் காணப்பட்டனர்.
இதற்குப் பொறுப்பான நபர் அல்லது நபர்களைத் தேடும் வேட்டை இன்று காலையிலும் தொடர்ந்தது. காலை சுமார் 9.30 மணியளவில், தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக வென்செல் கூறினார்.
எந்த வகையான ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்பதைக் கண்டறியவும் புலனாய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சந்தேக நபர் அல்லது நபர்கள் இன்னும் ஆயுதம் ஏந்தியுள்ளார்களா என்பது தெரியவில்லை.
துப்பாக்கிச் சூட்டிற்கான சாத்தியமான நோக்கங்களும், அதைச் சுற்றியுள்ள துல்லியமான சூழ்நிலைகளும் இன்னும் தெளிவாக இல்லை. சாட்சிகள் முன்வர வேண்டும் என்றும், சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் அல்லது காணொளிகள் வைத்திருப்பவர்கள் அவற்றை ஒப்படைக்குமாறும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மூலம்- swissinfo


