13 C
New York
Thursday, April 24, 2025

நாய் இறைச்சியில் கொத்து? – உணவகம் சீல் வைக்கப்பட்டதால் பரபரப்பு.

யாழ்ப்பாணம் – மாவிட்டபுரம் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் தரமற்ற இறைச்சி கொத்து வழங்கிய உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
 
கடந்த புதன்கிழமை மாலை குறித்த உணவகத்தில் இறைச்சி கொத்து வாங்கி சாப்பிட்ட ஒருவர், அதில் நாய் இறைச்சி என சந்தேகிக்கும் வகையில் தோற்றமளிக்கும் அதிக ரோமங்களை கொண்ட இறைச்சி துண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
 
உடனடியாக அந்தப் பகுதியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கப்பட்ட போதும், அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, உணவகத்தில் கொத்து ரொட்டி வாங்கியதற்கான பற்றுச்சீட்டு, உரோமங்களுடன் கூடிய இறைச்சியின் படம் என்பவற்றை ஆவணப்படுத்தி, தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
 
அதனைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் குறித்த உணவகத்தை சோதனைக்கு உட்படுத்திய பொது சுகாதார பரிசோதகர்கள் பாவனைக்கு உதவாத இறைச்சி இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.
 
தூய்மையற்ற முறையில் உணவுகளை கையாண்டமை இறைச்சியினை கொள்வனவு செய்தமைக்கான பற்றுச்சீட்டு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் இதன்போது தெரிய வந்தன.
 
அதனைத் தொடர்ந்து குறித்த உணவகம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, 65,000 ரூபா தண்டப்பணம் செலுத்த உத்தரவிடப்பட்டதுடன், குறித்த உணவகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles