சம்பள அதிகரிப்பு வாக்குறுதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, இலங்கை முழுவதும் உள்ள ஆசிரியர்கள், அதிபர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
சுகவீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்ததால், 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடசாலைகளில் இன்று கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன.
இதனால் மாணவர்களும் பெற்றோரும் பெரும் அவதிக்குள்ளாகினர்.
அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று கொழும்பில் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், நீதிமன்றம் அதற்கு தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த தடையை மீறி கோட்டே ரயில் நிலையம் முன்பாக கூடிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், பேரணியாக நகர்ந்த போது லோட்டஸ் வீதியில் பொலிசார் அவர்களைத் தடுத்து, நீர்த்தாரைப் பிரயோகம், கண்ணீர் புகைக் குண்டு வீச்சு நடத்தினர்.
இந்த தாக்குதலைக் கண்டித்து நாளையும், சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.