இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று மாலை சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூர்ந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் நேற்றுக் காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வெள்ளவத்தை கடற்கரையில் மாலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் மனித உரிமை அமைப்புகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள ராவய அமைப்பின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பொலிஸாருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதமும் இடம்பெற்றது.

