25.4 C
New York
Thursday, August 13, 2026

மருந்துத் தள்ளுபடி மோசடிசுவிஸ் மக்கள் 2 பில்லியன் பிராங்குகளுக்கு மேல் நஷ்டம்

சுவிட்சர்லாந்தில் மருத்துவர்களும், மருந்தகங்களும் தங்களுக்குக் கிடைத்த கோடிக்கணக்கான மருந்துத் தள்ளுபடிகளை சட்டப்படி மக்களுக்குக் கடத்தாமல் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டதால், கடந்த ஆறு ஆண்டுகளில் சுவிஸ் மக்கள் 2 பில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு மேல் (200 கோடிக்கும் அதிகம்) கூடுதலாகப் பணம் செலுத்தி நஷ்டமடைந்துள்ளனர். இந்த மாபெரும் முறைகேட்டை சுவிஸ் கூட்டாட்சி நிதித் தணிக்கை அலுவலகம் (EFK) கண்டறிந்து அம்பலப்படுத்தியுள்ளது. மருந்து விலைகளைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பிலுள்ள சுவிஸ் கூட்டாட்சி சுகாதார அலுவலகம் (BAG), கடந்த ஆறு ஆண்டுகளாக இதைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

  • மொத்த நஷ்டம் கடந்த 2020 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் காப்பீட்டுத் தாரர்களுக்கு (Prämienzahler) ஏற்பட்ட இழப்பு 2 பில்லியன் பிராங்குகளைத் தாண்டுகிறது.
  • 2024 தள்ளுபடித் தொகை: கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்கள் மருந்து நிறுவனங்களிடமிருந்து மொத்தம் 743 மில்லியன் பிராங்குகளை தள்ளுபடியாகப் பெற்றுள்ளனர்.
  • மக்களுக்குக் கிடைத்த பங்கு இந்த 743 மில்லியனில், வெறும் 90 மில்லியன் பிராங்குகள் (12% மட்டுமே) காப்பீட்டு நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் திருப்பித் தரப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை அனைத்தும் சேவை வழங்குநர்களின் பையிலேயே தங்கிவிட்டது.
  • மருந்தின் செலவு: சுவிட்சர்லாந்தின் கட்டாயக் காப்பீட்டுச் செலவுகளில் (Grundversicherung) நான்கில் ஒரு பங்கு மருந்துகளுக்காகவே செலவிடப்படுகிறது. 2024-இல் இதன் மதிப்பு சுமார் 10 பில்லியன் பிராங்குகள் ஆகும்.

சுவிஸ் சட்டப்படி, 2020 ஆம் ஆண்டு முதல் மருத்துவர்களும் மருந்தகங்களும் தங்களுக்குக் கிடைக்கும் மருந்துத் தள்ளுபடியில் குறைந்தது 51 சதவீதத்தை காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்குக் கடத்த வேண்டும் என்பது கட்டாயமாகும். இதன் மூலம் ஆண்டுக்கு 370 மில்லியன் பிராங்குகள் மக்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், இந்தச் சட்டம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் BAG அமைப்பு ஆரம்பத்தில் தட்டிக்கழிக்க முயன்றதால், தணிக்கைக்குழு நேரடியாகச் சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சர் எலிசபெத் பாமே-ஷ்ணைடரிடம் (Elisabeth Baume-Schneider) முறையிட்டது. அமைச்சரின் தலையீட்டிற்குப் பின், தற்போது BAG தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளது. இனிவரும் காலங்களில் மருந்தகங்களின் கணக்குப் புத்தகங்களை நேரடியாக ஆய்வு செய்யவும், தள்ளுபடிகளைத் துல்லியமாகக் காட்டாத நிறுவனங்கள் மீது கடுமையான நிர்வாக ரீதியான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது

20min.ch/story/bag-kontrollierte

Related Articles

Latest Articles