இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட, குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு – 2024” இன் கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி 2024 தொகைமதிப்பின் போது இலங்கையின் சனத்தொகை 21,763,170 ஆகும்.
2012 குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் போது இருந்ததை விட சனத்தொகை 1,403,731 நபர்களினால் அதிகரித்துள்ளது.
2001-2012 தொகைமதிப்பின் போது, சனத்தொகையின் சராசரி வருடாந்த வளர்ச்சி வீதம் 0.7 சதவீதமாக காணப்பட்டது. தற்போது, சனத்தொகையின் சராசரி வருடாந்த வளர்ச்சி வீதம் 0.5 சதவீதமாக குறைந்துள்ளது.
28.1 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மேல்மாகாணத்தில் வசிக்கின்றனர்.
அதேவேளை, குறைந்த சனத்தொகை ( 5.3 சதவீதம்) வடமாகாணத்தில் உள்ளது.
மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 2,433,685 பேர் வசிக்கின்றனர். அடுத்து கூடிய சனத்தொகையைக் கொண்ட கொழும்பு மாவட்டத்தின் சனத்தொகை 2,374,461 ஆகும்.
நாட்டில் சனத்தொகை குறைந்த மாவட்டங்களாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு (122,542), மன்னார் (123,674), கிளிநொச்சி (136,434) மற்றும் வவுனியா (172,257) போன்ற மாவட்டங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன.
2.23 சதவீதம் எனும் அதியுயர் சனத்தொகை வளர்ச்சி வீதத்தை முல்லைத்தீவு மாவட்டம் கொண்டிருக்கும் அதேவேளை, (0.01) எனும் குறைந்த வளர்ச்சி வீதத்தினை வவுனியா மாவட்டம் கொண்டிருக்கிறது.
ஒரு சதுர கிலோமீற்றரில் 3,549 நபர்கள் எனும் அதியுயர் சனத்தொகை அடர்த்தி கொழும்பு மாவட்டத்தில் காணப்படுகிறது.
குறைந்த சனத்தொகை அடர்த்தி காணப்படும் மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டமாகும். அங்கு சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீற்றரில் 50 நபர்கள் உள்ளனர்.