5000 ஆண்டுகள் பழமையான பொக்கிஷங்கள் காட்சிக்கு வைப்பு
உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் எகிப்தில் திறக்கப்பட்டுள்ளது. எகிப்தில் பிரமிடுகளுக்குப்பின் பெருமை சேர்க்கும் மேலும் ஒரு மகுடமாக இந்தக் காட்சியகம் அமைந்துள்ளது.
பன்னெடுங்கால பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் கொண்ட பகுதியான எகிப்தின் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள உலகின் பெரும் அருங்காட்சியகங்களுள் ஒன்றாக ‘கிராண்ட் எகிப்தியன் மியூசியம்’ என்றழைக்கப்படும் எகிப்திய பிரமாண்ட அருங்காட்சியகம் அமைந்துள்ளது.இந்த அருங்காட்சியகம் நீண்ட இடைவெளிக்குப்பின் முழுமையாக நேற்று (01) திறக்கப்பட்டுள்ளது.
எகிப்தின் அதிபராக அல்-சிசி கடந்த 2014இல் பதவியேற்றுக்கொண்ட பின், இந்த அருங்காட்சியம் கட்டமைப்பதற்கான சுமார் 100 கோடி டாலர் பொருட்செலவிலான திட்டம் 20 ஆண்டுகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் செயல்வடித்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அருங்காட்சியகம் திறப்பு விழாவையொட்டி எகிப்து அதிபர் அப்தெல்-ஃபட்டா எல்-சிசி (அல்-சிசி) தெரிவித்திருப்பதாவது; “இந்த அருங்காட்சியகம் மனிதநேயத்தின் ஒற்றுமை மீதும் அமைதி, அன்பு மற்றும் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பின் மீதும் நம்பிக்கை பூண்ட ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் ஊற்றாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு அருகாமையில், கிஸா பள்ளத்தாக்கில் பிரமிடுகளை பிரதிபலிக்கும் வகையில் அதே வடிவத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியக வளாகம் மொத்தம் 50 ஹெக்டேர் பரப்பளவில் 2,58,000 சதுர அடியில்(70 கால்பந்து திடல் அளவு) தன்னகத்தே 3 பிரமிடுகளையும் ஸ்பின்க்சையும் உள்ளடக்கியதாக 50,000 இற்கும் மேற்பட்ட பழங்கால கலைநயப் பொருள்களை காட்சிப்படுத்துகிறது.
எகிப்திய கலாசாரத்தின் ‘டுட்டான்காமுன் (Tutankhamun)’ அரசர் காலத்து ஃபெரோவ் பயன்படுத்திய ரதங்கள், தங்க அரியணை, கிரீடம் உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் பொருள்களின் தொகுப்பு (‘டுட்டான்காமுன் (Tutankhamun)’ என்றழைக்கப்படுகிறது) இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.


