அமெரிக்காவின் டெல்டா போர்சஸ் எனப்படும் சிறப்புப் படையினர், வெனிசுலாவில் தரையிறங்கி, அந்த நாட்டின் ஜனாதிபதி நகோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்து அமெரிக்காவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை 1.50 மணியளவில் வெனிசுலா தலைநகர் கராகஸ் உள்ளிட்ட 4 இடங்களில் அமெரிக்க விமானங்கள் குண்டுத் தாக்குதலை நடத்தின.
இராணுவ விமானத்தளம், இராணுவத் தளம், துறைமுகம் என்பன தாக்கப்பட்ட நிலையில், அமெரிக்க விமானப்படையின் இரட்டை காற்றாடிகளைக் கொண்ட ஹெலிகொப்டர்கள் மூலம் தரையிறங்கிய டெல்டா போர்சஸ் சிறப்புப் படையினர், வெனிசுலா ஜனாதிபதியையும் மனைவியையும் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் உலகம் முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கராகஸில் குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வெனிசுலா ஜனாதிபதியும் அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு கொண்டு வரப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார்.
வெனிசுலா ஜனாதிபதி மதுரோ போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது .
இந்த நிலையில் அவர் மீது நியூயோர்க் நீதிமன்றத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என அமெரிக்க சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்புச் சம்பவத்திற்கு ரஷ்யா, கியூபா, கொலம்பியா, சிலி உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலில் பிரிட்டன் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ள பிரதமர் ஸ்டார்மர், பிரிட்டன் பிரஜைகள் வெனிசுலா செல்ல வேண்டாம் என்று அறிவித்துள்ளார்.
வெனிசுலா ஜனாதிபதி அமெரிக்காவினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

