கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) பரவியுள்ள எபோலா தொற்றுநோயை அடுத்து, உலக சுகாதார அமைப்பு (WHO) இன்று இரண்டாவது மிக உயர்ந்த சர்வதேச எச்சரிக்கை நிலையை அறிவித்துள்ளது.
எபோலா தொற்று மிகவும் கொடியதும், தடுப்பூசி இல்லாததுமான ஒரு வகை வைரஸால் ஏற்படுகிறது.
ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்ட உலக சுகாதார அமைப்பு, X வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, அதன் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், இந்த வைரஸ் “சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொது சுகாதார அவசரநிலையை (PHEIC) உருவாக்குகிறது, ஆனால் ஒரு பெருந்தொற்று அவசரநிலைக்கான அளவுகோல்களைப் பூர்த்தி செய்யவில்லை” என்று முடிவு செய்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு முதல், “பெருந்தொற்று அவசரநிலை”க்கு அடுத்தபடியாக, PHEIC என்பது உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையாக இருந்து வருகிறது.
மிகவும் எளிதில் பரவக்கூடிய ரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்தும் எபோலா, தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் இருந்தபோதிலும், தொடர்ந்து அச்சுறுத்தலாகவே உள்ளது.
இந்த சிகிச்சைகள், இதுவரை இல்லாத மிகப்பெரிய தொற்றுநோய்களை ஏற்படுத்திய ஜைர் வகை வைரஸுக்கு எதிராக மட்டுமே பயனுள்ளதாக இருக்கின்றன.
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் வடகிழக்கில் உள்ள இடுரி மாகாணம், எபோலாவின் புண்டிபுக்யோ வகையால் பாதிக்கப்பட்டுள்ளது, இதற்கு எதிராக தடுப்பூசி எதுவும் இல்லை.
மே 16 நிலவரப்படி, உலக சுகாதார அமைப்பு (WHO) ஆய்வகங்களில் எட்டு நோயாளிகளை உறுதி செய்துள்ளது. மேலும், அந்த மாகாணத்தில் 246 பேர் நோய்த்தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 80 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் கணக்கிட்டுள்ளது.
அத்துடன், கின்ஷாசாவில் மற்றொரு நோயாளியும், உகாண்டாவின் கம்பாலாவில், சமீபத்தில் இடுரியிலிருந்து திரும்பிய பயணிகளிடையே ஒரு மரணமும் பதிவாகியுள்ளது.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஆபிரிக்க ஒன்றியத்தின் சுகாதார அமைப்பான ஆபிரிக்கா சிடிசி, 336 பேர் நோய்த்தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், 88 பேர் இந்த வைரஸால் உயிரிழந்திருக்கலாம் எனப் பதிவு செய்துள்ளது.
இந்த நோய் பரவல் எளிதில் அணுக முடியாத பகுதியில் அமைந்துள்ளதால், ஆய்வகங்களில் சில மாதிரிகளே பரிசோதிக்கப்பட்டுள்ளன.
மூலம்- swissinfo

