29.2 C
New York
Wednesday, August 5, 2026

கடும் வறட்சியினால் ‘ரெய்னா ரொக்’ திறந்தவெளி இசை விழா ரத்து.

தொடர்ந்து நிலவும் வறட்சியின் காரணமாக, சுவிட்சர்லாந்தின் பாசல் கவுன்டி மாகாணத்தில் நடைபெறவிருந்த ‘ரெய்னா ரொக்’ திறந்தவெளி இசை விழாவை ஏற்பாட்டாளர்கள் ரத்து செய்துள்ளனர்.

தற்போதைய மிக உயர்ந்த அபாய நிலையின் கீழ், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நிகழ்வை நடத்த முடியவில்லை என்று ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தத் திறந்தவெளி நிகழ்வு, ரிக்கன்பாக் எல்லையில் உள்ள ரெய்னென்ஹஸ்லியில் ஓகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நடைபெறவிருந்தது.

இந்த இடம் குடியிருப்புப் பகுதிக்கு வெளியே அமைந்துள்ளதால், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எதுவும் அனுமதிக்கப்பட்டிருக்காது.

இதனால், எரிவாயு அடுப்புகள், எரிவாயு பார்பிக்யூக்கள் மற்றும் மின்சார பார்பிக்யூக்கள் போன்ற பல பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும்.

வறண்ட புல்வெளியில் கார்களை நிறுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்காது.

இந்த விழா அடுத்த ஆண்டு வரை மீண்டும் நடைபெறாது. ஏற்கனவே நுழைவுச்சீட்டு வாங்கியவர்களுக்குப் பணம் திரும்ப வழங்கப்படும் என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டெப்ஃபாதர் ஃப்ரெட், அத்துடன் பாசல் பகுதியைச் சேர்ந்த லோம்பேகோ சர்ஃபர்ஸ், கல்லெஸ் கவியார், டிஸ்க்ரூவ் மற்றும் டென்னர்கிளான் போன்ற இசைக்குழுக்கள், இந்த விழாவின் ஆறாவது பதிப்பில் நிகழ்ச்சிகளை நடத்தவிருந்தன.

வறட்சியின் காரணமாக, ஜிக் திறந்தவெளி திரையரங்கம் மற்றும் டீடிஸ்பெர்க் விழா உட்பட, இந்த மாகாணத்தில் உள்ள பிற நிகழ்வுகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன.

வறட்சியைச் சமாளிக்க மாகாண நெருக்கடி மேலாண்மைக் குழுவால் விதிக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, பிற கட்டுப்பாடுகளுடன், தீ மூட்டுவதற்கு முழுமையான தடை அமுலில் உள்ளது. எரிவாயு மற்றும் மின்சார பார்பிக்யூக்களை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles