23 C
New York
Thursday, April 24, 2025

இலங்கை பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்!

பல தசாப்தங்களாக காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் விதி மற்றும் அவர்களின் இருப்பிடத்தை வெளிப்படுத்தவும், அந்தக் குற்றங்களுக்கு காரணமானவர்களை தண்டிக்கவும் இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று (17) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தக் குற்றங்களுக்காக அரச பாதுகாப்புப் படைகள் மற்றும் அதனுடன் இணைந்த ஆயுதக் குழுக்களின் தலையீட்டை ஒப்புக்கொண்டு  பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களையும் ஒருபோதும் மறக்கக்கூடாது என்பதை நினைவூட்டுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர்  வாக்கர் டர்க் இந்த அறிக்கை ஊடாக குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களை எதிர்பார்த்து காத்திருக்கும் உறவினர்களுக்கு உண்மையை அறியும் உரிமையுள்ளது எனவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் கடன்பட்டிருப்பதாகவும்  வாக்கர் டர்க் குறித்த அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான குற்றச்செயல்கள் அவற்றை எதிர்கொண்ட மக்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கைச் சமூகத்தையும் ஒரு சமூகமாக அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்படடுள்ளது.

 காணாமல் ஆக்கப்படுதலில் இருந்து சகல நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையை அங்கீகரிப்பது போன்ற சாதகமான நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், தனிநபர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் குறைவாகவே உள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்படடுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான அனைத்துத் தகவல்களும் வெளிவரும் வரை விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் சர்வதேச சட்டம் தொடர்ந்தும் மீறப்பட்டு வருகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கருத்து என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முதல் அலை தொடங்கி பல தசாப்தங்கள் கடந்துள்ள போதிலும், இலங்கை அதிகாரிகள் வன்முறைகளுக்கு பொறுப்புக்கூறத் தவறியுள்ளனர் என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதன்படி, பல தசாப்தங்களாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்துகிறது.

Related Articles

Latest Articles