வவுனியாவுக்கு அருகே நேற்று இரவு நில அதிர்வு ஒன்று ஏற்பட்டிருக்கலாம் என்று, நிலஅதிர்வு, எரிமலை வெடிப்பு போன்றவற்றை கண்காணிக்கும் வோல்கானோ டிஸ்கவரி இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 11.02 மணியளவில் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது.
வவுனியாவுக்கு வடமேற்கே 5 கிலோ மீற்றர் தொலைவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
நிலத்துக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் இது மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இது எந்த அளவுடையதாக இருந்தது, என்பது குறித்தோ, இதனை உறுதிப்படுத்தும் அமைப்புகளிடம் இருந்தோ முறைப்படியான தகவல் வெளியிடப்படவில்லைஎன்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை வவுனியா, மதவாச்சியை அண்டிய பகுதிகளில் இருந்து பலர் இந்த அதிர்வு குறித்து முறையிட்டுள்ளதாகவும், கிளிநொச்சி, அனுராதபுரம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் அது உணரப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிந்திய செய்தி.
அதேவேளை, வவுனியாவில் இருந்து 23 கிலோமீற்றர் தொலைவில் நேற்று இரவு 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று இரவு 11.01 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி அனுராதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்டதாக இருந்தது என்றும், இலேசான நில அதிர்வு காரணமாக எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.