சுவிஸ் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தின் அடித்தளத்துக்குள் வெள்ளம் புகுந்தததால், ஜெனிவா வான்வெளி மூடப்பட்டதுடன் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் மற்ற இடங்களைப் போலவே, நேற்று மாலை ஜெனீவாவிலும் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.
இதனால் சுவிஸ் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தின் அடித்தளத்துக்குள் வெள்ளம் புகுந்தது.
இதனால் தரவு மையத்தின் குளிர்ச்சியூட்டும் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகள் அதிக வெப்பமடையும் ஆபத்துக் காரணமாக, ஜெனீவா வான்வெளியை நேற்றிரவு 10 மணிக்குப் பின்னர், தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானங்கள் தரையிறங்கவோ அல்லது புறப்படவோ முடியவில்லை.
பிரச்சினையைத் தீர்ப்பதற்கு Skyguide கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இன்று அதிகாலை, 12:30 மணிக்கு செயற்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் அறிவித்தது.
இருப்பினும், மறு அறிவிப்பு வரும் வரை அதன் செயற்பாட்டுத் திறன் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக Skyguide பேச்சாளர் தெரிவித்தார்.
குறைக்கப்பட்ட விமான செயற்பாடுகளுடன் நாங்கள் எவ்வளவு காலம் செயறபட வேண்டும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
இதனால் பயணிகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு Skyguide மன்னிப்பு கோரியுள்ளது.
ஜெனிவா வான்பரப்பு மூடப்பட்டதால், சுவிஸ் விமான நிறுவனம் மூன்று விமானங்களை சூரிச்சிற்கு திருப்பிவிட நேரிட்டது. இதனால் சுமார் 100 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
ஜெனீவாவில் இருந்து புறப்படவிருந்த 22 விமானங்களினதும் தரையிறங்கவிருந்த 12 விமானங்களினதும் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சுமார் 150 பயணிகள் ஜெனிவா விமான நிலையத்தில் இரவைக் கழிக்க வேண்டியிருந்தது.
இன்று காலை ஜெனிவாவில் மேலும் பல விமானங்கள் இரத்துச் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலம் மூலம் – 20min.