டிக்டொக் வீடியோக்களை அனுப்பி, சுவிசில் வசிக்கும், 52 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து சுமார் 45 இலட்ச ரூபாவுக்கும் மேல் மோசடி செய்த மூன்று பெண்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுவிசில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஒருவரது, வட்ஸ் அப் இலக்கத்திற்கு அழகிய பெண்ணொருவரின் டிக்டொக் வீடியோக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அந்த வீடியோக்களை பார்த்த அவர், குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகளை பேணி உள்ளார்.
அவருடன பேசிய பெண் தனக்கு 22 வயது என்றும், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்றும் கூறி பழகத் தொடங்கி, நெருங்கிய தொடர்பாக மாறியுள்ளது.
இதன்போது, குறித்த பெண் பல்வேறு கட்டங்களாக, சுமார் 45 இலட்சம் ரூபாவுக்கு மேல் அவரிடம் இருந்து பெற்றுள்ளார்.
குறித்த பெண்ணிடம் வீடியோ அழைப்பில் பேச சுவிஸ் வாசி பலமுறை முயற்சித்த போதும், பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணம் வந்த அவர், பெண்ணை நேரில் சந்திக்க விரும்பிய போதிலும் பெண் அதற்கு மறுப்பு தெரிவித்து, தொடர்பை துண்டித்துள்ளார்.
சந்தேகம் அடைந்தவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து டிக்டொக் வீடியோவில் காணப்பட்ட பெண்ணை கைது செய்து விசாரணை செய்தனர். ஆனால் அப்பெண்ணுக்கு இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து சுவிசில் இருந்து பணம் போடப்பட்ட வங்கி கணக்கு இலக்கத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து, மற்றொரு பெண்ணை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, தனக்கு தெரிந்த பெண் ஒருவரே, தனது கணக்கு இலக்கத்திற்கு சுவிஸ் நாட்டவரை பணம் போட சொல்லி , பணம் போடப்பட்டது என கூறியுள்ளார்.
இதையடுத்து, 47 வயதான பெண் ஒருவரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது, அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அந்தப் பெண்ணுக்கும் , சுவிஸ் வாசிக்கும் இடையில் சில வருடங்களுக்கு முன்னர் தொடர்பு இருந்தது, அவர் கடந்த முறை யாழ்ப்பாணம் வந்து அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார்.
சுவிஸ் சென்ற பின்னர் , இப் பெண்ணுடனான தொடர்பை அவர் குறைத்துள்ளார்.
அவரின் பலவீனங்களை அறிந்திருந்த குறித்த பெண் , தனது நண்பியின் பெயரில் டிக்டொக் ஐடியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அழகிய பெண்ணொருவர் இருப்பதனை அவதானித்து, அந்தப் பெண்ணின் வீடியோக்களை தரவிறக்கி, இவருக்கு வட்ஸ் அப் ஊடாக அனுப்பி, அவரது பெயரில் உறவை வளர்த்துள்ளனர்.
பணம் போட சொல்லி கொடுக்கப்பட்ட வங்கி கணக்கிலக்கத்தில் உள்ள பெயரும் , டிக்டொக் வீடியோவிலும் உள்ள பெயரும் ஒன்றாக இருந்ததமையால் , அவர் சந்தேகமின்றி பணத்தினை அந்த கணக்கு இலக்கத்திற்கு அனுப்பியுள்ளார்.
பணத்தை தொடர்ந்து ஒரே கணக்கு இலக்கத்திற்கு பெறாமல், மற்றுமொரு பெண்ணின் கணக்கு இலக்கத்தினையும் கொடுத்து அந்த பெண்ணின் கணக்கு இலக்கம் ஊடாகவும் பணத்தினை பெற்றுள்ளனர்.
அதனை அடுத்து பிரதான சந்தேக நபரான 47 வயதான பெண்ணும் , வங்கி கணக்கு இலக்கத்தின் உரிமையாளர்களான இரு பெண்களுமாக மூன்று பெண்களையும் கைது செய்து, மேலதிக விசாரணைகளின் பின்னர் , யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் புதன்கிழமைமுற்படுத்தப்பட்டனர்.
மூவரும் குற்றங்களை ஏற்றுக்கொண்டதுடன் , பணத்தினையும் மீள வழங்குவதாக மன்றில் உறுதி அளித்தனர்.
அதனை தொடர்ந்து மூவரையும் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.