இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, அனுரகுமார திசநாயக்க இன்று முற்பகல் 10 மணியளவில் பதவியேற்றார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடந்த எளிமையான நிகழ்வில், பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
இதயடுத்து, அவர், முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோருடன் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கலந்துரையாடினார்.
அத்துடன் முக்கியமான மூன்று புதிய நியமனங்களையும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க வழங்கியுள்ளார்.
இதன்படி ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் விமானப்படை அதிகாரியான எயர் வைஸ் மார்ஷல் சம்பந்த துயகொந்தா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிஐடி பணிப்பாளர் ரவி செனிவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அனுரகுமார திசநாயக்கவிற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இந்தியப் பிரதமர் மோடி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், வெனிசுவேலா ஜனாதிபதி, மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் தினேஸ் குணவர்த்தன பதவி விலகுவதாக அறிவித்துள்ளதை அடுத்து அமைச்சரவை கலைந்துள்ளது.
புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பொறுப்பேற்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரை இன்று இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.