வவுனியா – ஓமந்தையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவரது மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இமயமலைக்கு தல யாத்திரை சென்று விட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பி, யாழ்ப்பாணத்திற்கு காரில் பயணித்துக் கொண்டிருந்த போது. ஓமந்தையில் டிப்பருடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.
இந்த விபத்தில், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் பணியாற்றும், சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா (52 வயது) சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
அவரது மனைவியான யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீட விரிவுரையாளர் சீதாலட்சுமி (50 வயது), மகன் அக்சய் (27 வயது), மாமனார், சுவாமிநாதன் (70 வயது) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இருவர் யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காரை ஓட்டிச் சென்றவரின் தூக்க கலக்கத்தினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.