கடந்த மாதம் நடந்த, 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்திற்குள் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அது முடியாவிட்டால் பத்து நாட்களுக்குள் நிச்சயமாக பெறுபேறுகள் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை முடிந்து, ஒன்றரை மாதங்களுக்குள் முடிவுகளை வெளியிடுவது, கல்வி முறையின் மைல்கல்களில் ஒன்றாக பார்க்க முடியும் எனவும் அவர் கூறினார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை, மே 6 முதல் மே 15 ஆம் திகதி வரை நடைபெற்றது.
இந்த பரீட்சையில், 387,648 பாடசாலை பரீட்சார்த்திகளும், 65,331 தனியார் பரீட்சார்த்திகளுமாக 452,979 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.