9 C
New York
Monday, March 30, 2026

பிரித்தானியாவில் வெற்றியைத் தவறவிட்ட ஈழத்தமிழ் பெண் வேட்பாளர்கள்.

பிரித்தானியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஈழத் தமிழ்ப் பெண் வேட்பாளர்கள் தோல்வியடைந்திருக்கின்றனர்.

Sutton and Cheam தொகுதியில், தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாக கொண்ட கிருஷ்ணி ரிஷிகரன் 8,430 (17.7%) வாக்குகளை மட்டும் பெற்று மூன்றாவது இடத்தையே பெற்றுள்ளார்.

இந்த தொகுதியை கொன்சர்வேட்டிவ் கட்சியிடம் இருந்து லிபரல் ஜனநாயக கட்சி கைப்பற்றியுள்ளது.

லிபரல் ஜனநாயக கட்சி வேட்பாளர் லூக் ரெய்லர்,  17,576 (36.9%) வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர், 13,775  (28.9%) வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றார்.

தொழிற்கட்சி சார்பில், Hamble Valley தொகுதியில் போட்டியிட்ட டெவினா போல் என்ற ஈழத் தமிழ் பெண் வேட்பாளரும் மூன்றாமிடத்தையே பிடித்துள்ளார்.

இங்கு கொன்சர்வேட்டிவ் வேட்பாளர் 19,671 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், லிபரல் ஜனநாயக கட்சி வேட்பாளர் 14,869 வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றார்.

மூன்றாமிடத்தைப் பிடித்துள்ள டெவினா போலுக்கு 8,753 வாக்குகள் கிடைத்துள்ளன.

அதேவேளை, Stalybridge and Hyde தொகுதியில் லிபரல் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட கமலா குகன், என்ற தமிழ் வேட்பாளர் 1,080 (2.9%) வாக்குகளை மட்டும் பெற்று கடைசி இடத்தைப் பிடித்துள்ளார்.

அங்கு தொழிற்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார்.

அதேவேளை, Hammersmith and Chiswick தொகுதியில் பசுமைக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட, நாராணி ருத்ரா ராஜன், 4,468 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்.

இங்கு தொழிற்கட்சி வேட்பாளர் 24,073 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Related Articles

Latest Articles