ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள சிலிண்டர் சின்னத்தை பறித்து, அவருக்கு வேறு சின்னத்தை வழங்குமாறு, அரகலய மக்கள் போராட்ட சிவில் அமைப்பின் பொதுச்செயலாளர் ஜனக பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு எமக்கு வழங்கியுள்ள சிலிண்டர் சின்னத்தை எவ்வாறு சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எமக்கு அரசியல் கட்சி ஒன்று இல்லாத காரணத்தால் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு தீர்மானித்து கட்டுப்பணம் செலுத்தினோம்.
இதற்கமைய களுத்துறை –மதுராவெல, களுத்துறை நகர சபை மற்றும் களுத்துறை பிரதேச சபை, பாணந்துறை ஆகிய பகுதிகளில் சுயாதீனமாக போட்டியிடுவதற்கு எமக்கு ‘சமையல் எரிவாயு சிலிண்டர்’ சின்னம் வழங்கப்பட்டது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த நிலையில் அரசாங்கத்தின் குளறுபடிகளினால் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறவில்லை.
தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் ஏதும் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய இரத்து செய்யபடவில்லை. இவ்வாறான நிலையில் எவ்வாறு எமக்கு வழங்கிய சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னத்தை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க முடியும்.
எமக்கு வழங்கிய சிலிண்டர் சின்னத்தை ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கியுள்ளதால் எமது அரசியல் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எமக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக மக்கள் கருத கூடும்.
ஆகவே ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள சின்னத்தை இரத்து செய்து அவருக்கு பொருத்தமான சின்னத்தை வழங்குங்கள் என்று ஆணைக்குழுவிடம் முறைபாடு செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.