ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை தமிழ் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சித்தார்த்தன், சாணக்கியன்,மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,ஆகியோர் இந்தியப் பிரதமருடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பு குறித்து இந்தியப் பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்.
பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவித்தேன்.
அவர்கள் இருவருமே தனிப்பட்ட ரீதியில் எனக்கு தெரிந்தவர்கள்.
அத்துடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இந்தச் சந்திப்பின்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
எனது விஜயத்தின் போது ஆரம்பித்து வைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் அவர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும். என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.