26.9 C
New York
Friday, June 20, 2025

இமயமலையில் வேகமாக உருகும் பனிப்பாறைகள்

அதிக வெப்பம் காரணமாக இமயமலை பகுதியில் இருக்கும் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்தியாவில், வட மாநிலங்களில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.

பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள், பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதிக வெப்பம் காரணமாக, இமயமலைப் பகுதியில் இருக்கும் ஏரிகளின் விரிவாக்கத்திற்கும் புதிய ஏரிகள் உருவாவதற்கும், பனிப்பாறை விரிவடைதல் வழிவகுப்பதாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்பாறைகள் உருகுவதன் மூலம் உருவாகும் இந்த நீர்நிலைகள் பனிப்பாறை ஏரிகள் என அழைக்கப்படுகிறது.

பனிப்பாறை விரிவடைவதால் ஏரி வெடிப்பு, பெரு வெள்ளங்கள் போன்ற குறிப்பிடத்தக்க அபாயங்களும் ஏற்படுவதாகவும், இது பேரழிவு தரும் விளைவுகள் எனவும் இஸ்றோவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோரைன் அல்லது பனிக்கட்டி போன்ற இயற்கை அணைகள் உடைவதால் பனிப்பாறை ஏரிகள் அதிக அளவு உருகும் நீரை வெளியிடும் போது வெள்ளம் ஏற்படுகிறது. இதன் விளைவாக கீழ்நோக்கி திடீர் மற்றும் கடுமையான வெள்ளம் ஏற்படுகிறது.

கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான இந்திய இமயமலை ஆற்றுப்படுகைகளின் நீர்ப்பிடிப்புகளை உள்ளடக்கிய நீண்ட கால செயற்கைக்கோள் படங்கள் பனிப்பாறை ஏரிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், 2016 – 2017 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட 10 ஹெக்டேருக்கும் அதிகமான 2,431 ஏரிகளில், 89 சதவீதம் அதாவது 676 பனிப்பாறை ஏரிகள் 1984 ஆம் ஆண்டில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் விரிவடைந்துள்ளன.

கடந்த 38 ஆண்டுகளில் இரு மடங்கு வேகத்தில் பனிப்பாறைகள் உருகுவதால், ஏரிகள் சுற்றுச்சூழலில் மாற்றங்கள் ஏற்படுவதுடன், பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத்தின் அபாயமும் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles