சுவிட்சர்லாந்து வெளிநாடுகளில் பத்து எரிவாயு மின் உற்பத்தி நிலையத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக WWF, கிரீன்பீஸ், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் பப்ளிக் ஐ உள்ளிட்ட 23 அரசு சாரா நிறுவனங்கள், குற்றம் சாட்டியுள்ளன.
சூரிச்சில் உள்ள சுவிஸ் ஏற்றுமதி இடர் காப்பீட்டு (SERV) தலைமையகத்திற்கு வெளியே புதன்கிழமை அவர்கள் போராட்டம் நடத்தினர்.
சுவிஸ் ஜனாதிபதி மற்றும் பொருளாதார அமைச்சர் கை பர்மெலின் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆல்பர்ட் ரோஸ்டி ஆகியோருக்கு எழுதிய திறந்த கடிதத்தில், 23 அரசு சாரா நிறுவனங்களும், சுவிட்சர்லாந்து கிளாஸ்கோவில் 2021 COP26 இல் செய்த உறுதிமொழிகளை மீறுவதாக குற்றம்சாட்டியள்ளன.
அந்த மாநாட்டில், சுவிட்சர்லாந்து வெளிநாடுகளில் புதைபடிவ எரிபொருள் திட்டங்களுக்கு நிதியளிப்பதை நிறுத்துவதாக உறுதியளித்தது.
2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, SERV வெளிநாடுகளில் பத்து எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களுக்கு தற்காலிக அல்லது முழு ஆதரவை வழங்கியுள்ளது என்று அமைப்புகள் கூறுகின்றன.
இந்தத் திட்டங்கள் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 20 மில்லியன் தொன் CO2 க்கு சமமான உமிழ்வை உருவாக்கும் என்று அவர்கள் மதிப்பிடுகின்றனர், இது சுவிட்சர்லாந்தின் மொத்த ஆண்டு உமிழ்வில் பாதி.
வாயு மின் உற்பத்தியை விரிவுபடுத்துவதை ஆதரிப்பதன் மூலம், SERV காலநிலை நெருக்கடியை மோசமாக்குகிறது என்று அரசு சாரா நிறுவனங்கள் வாதிடுகின்றன.
இந்த ஆதரவு சுவிட்சர்லாந்தின் வெளியுறவு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை கொள்கையின் நம்பகத்தன்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதை மெதுவாக்குகிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த திட்டங்களை உடனடியாக நிறுத்தி தரவுகளில் முழு வெளிப்படைத்தன்மையை வழங்குமாறு சுவிஸ் அரசாங்கம், பொருளாதார விவகாரங்களுக்கான சுவிஸ் மாநில செயலகம் (SECO) மற்றும் SERV ஆகியவற்றை இந்த அமைப்புகள் கேட்டுக்கொள்கின்றன.
ஒரு சுயாதீன கூட்டாட்சி அமைப்பாக, SERV ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், 2040 க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைய வேண்டும் என்ற காலநிலை சட்டத்தின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
மூலம்- swissinfo

