அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானிய உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார் என ஈரானிய அரச தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
அவரது வசிப்பிட வளாகம் மற்றும், அலுவலகம் என்பன நேற்றுக்காலை இஸ்ரேலின் கடும் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தன.
இதில் கமேனி அவரது மகள், மருமகன், பேரன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். கமேனியின் மரணத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முதலில் உறுதிப்படுத்திய நிலையில் ஈரானிய ஊடகங்கள் அதனை மறுத்திருந்தன.
கமேனியின் உடலைக் கண்டுபிடித்ததாக இஸ்ரேல் அறிவித்திருந்த நிலையில், தற்போது கமேனியின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ள அரச தொலைக்காட்சி, 40 நாள்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்குப் பழிவாங்கப் போவதாக ஈரானின் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறும் நிலையில், ஈரானின் பாதுகாப்பு அமைச்சர்,புரட்சிகர காவல்படையின் தளபதி உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீதும், ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்து 121 பேர் காயம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பஹ்ரெய்ன், அபுதாபி, கட்டார், டுபாய், குவைத்,ஈராக் விமான நிலையங்கள் ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளன.

