35.4 C
New York
Wednesday, July 15, 2026

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போராட்டம்: ஐரோப்பிய துறைமுகக் கூட்டமைப்பில் சுவிட்சர்லாந்தும் இணைந்தது

துறைமுகங்கள் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட சர்வதேச குற்றக் கும்பல்களின் சட்டவிரோதச் செயல்களைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட “ஐரோப்பிய துறைமுகக் கூட்டமைப்பில்” (European Ports Alliance) சுவிட்சர்லாந்தும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

இந்தக் கூட்டமைப்பில் சுவிட்சர்லாந்து மற்றும் நார்வே உட்பட மொத்தம் 28 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) அறிவித்துள்ளது.

துறைமுகங்களின் தளவாடங்கள் (Logistics), தகவல் தொழில்நுட்ப அமைப்புகள், ஊழியர்கள் மற்றும் செயல்பாட்டு முறைகளை குற்றக் கும்பல்களிடமிருந்து பாதுகாப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.

28 நாடுகளுடன் சேர்த்து, ஐரோப்பாவின் 50-க்கும் மேற்பட்ட கடல் மற்றும் உள்நாட்டு நதித் துறைமுகங்கள், தொழில் கூட்டமைப்புகள், ‘யூரோபோல்’ (Europol) மற்றும் ஐரோப்பிய ஒன்றிய போதைப்பொருள் முகமை (EUDA) ஆகிய அமைப்புகளும் இதில் இணைந்து செயல்படுகின்றன.

சுவிட்சர்லாந்தின் மிக முக்கியமான வர்த்தக நுழைவாயிலாக விளங்கும் பாசலில் (Basel) உள்ள ‘ரைன் நதித் துறைமுகங்களின்’ (Rhine ports) பாதுகாப்பை பலப்படுத்தவும், தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த உறுப்பினர் சேர்க்கை சுவிட்சர்லாந்துக்கு பெரிதும் உதவும்.

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடைபெற்ற இக்கூட்டமைப்பின் உயர்மட்ட அமைச்சர் அளவிலான கூட்டத்தில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன. இக்கூட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்விவகாரங்களுக்கான ஆணையர் மேக்னஸ் ப்ரன்னர் (Magnus Brunner) தலைமை தாங்கினார்

பெரிய கடல் துறைமுகங்கள் மட்டுமின்றி, நிலப்பகுதிகளுக்குள் இருக்கும் சிறிய நதித் துறைமுகங்கள் மற்றும் போக்குவரத்து மையங்களையும் (Verkehrsknotenpunkte) போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் தற்போது அதிகளவில் குறிவைத்து வருவதாக இந்தக் கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.

இதனை எதிர்கொள்ள, துறைமுக நிர்வாகங்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்தையும், கூட்டுப் பாதுகாப்பையும் மேலும் பலப்படுத்த இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles