தற்போதைய வறட்சி, பல உள்ளூர் அதிகார அமைப்புகளை நீர் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நிர்பந்தித்துள்ளது.
அடுத்த வாரம் வெப்ப அலை முன்னறிவிக்கப்பட்டிருந்தாலும், குடிநீர் விஷயத்தில் எந்தப் பிரச்சனைகளும் எதிர்பார்க்கப்படவில்லை.
விவசாயப் பயன்பாட்டிற்கான நீரைப் பொறுத்தவரை நிலைமை மிகவும் கடினமாக உள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஏராளமான நீர் வளங்கள் உள்ளன. இருப்பினும், வறட்சிக் காலங்களில் பிராந்திய அளவில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கக்கூடும் என சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
குடிநீர் விநியோகத்தில் பிரச்சனைகள் எப்போது, எப்படி எழும் என்பதை தேசிய அளவில் தீர்மானிக்க இயலாது. இதற்குக் காரணம், நீர் மேலாண்மை மாகாணங்களின் அதிகார வரம்பிற்குள் வருகிறது.
நீர் விநியோகம் நகராட்சி அல்லது மாகாண அளவில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் வளங்கள், உள்கட்டமைப்பு மற்றும் விநியோக அமைப்புகளின் ஒன்றிணைப்பை பெரிதும் சார்ந்துள்ளது.
விவசாயத்திற்குத் தேவைப்படும் அளவோடு ஒப்பிடுகையில், சுத்தமான குடிநீரின் பயன்பாடு மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, இந்த நிலைமை இன்னும் மக்களுக்கு ஒரு கடுமையான பிரச்சனையாக இல்லை.
எனினும், தற்போது, வறட்சியின் விளைவாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. புல் வளரவில்லை என்று சோலோதூர்ன் விவசாயிகள் சங்கம் புகார் கூறுகிறது. அறுவடை குறைவாக இருக்கும் என்றும், எதிர்பார்த்ததை விட முன்னதாகவே அறுவடை செய்ய வேண்டியிருக்கும் என்றும் அது எச்சரிக்கிறது.
தீவனத்தைப் பொறுத்தவரை நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கிட்டத்தட்ட எதுவும் வளரவில்லை. பல பண்ணைகள் ஏற்கனவே தங்கள் கையிருப்பைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன, மேலும் இறக்குமதிகள் கடினமாகி வருகின்றன.
மேலும், சுவிட்சர்லாந்தின் வேளாண் ஆராய்ச்சிக்கான கூட்டாட்சி சிறப்பு மையமான அக்ரோஸ்கோப், இந்த வறட்சி ஓகஸ்ட் மாதத்தின் பிற்பகுதி வரை தொடர்ந்தால், 2003 அல்லது 2018-ஆம் ஆண்டை விட நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று எச்சரிக்கிறது.
மூலம்- swissinfo


