தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதென திருகோணமலை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் தலைமையில் திருகோணமலை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் நீண்ட விவாதம் இடம்பெற்றிது.
இதன் பின்னர் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதற்கு தாம் விரும்புவதாகவும் குறித்த முடிவை மத்திய செயற்குழுவிற்கு அறிவிக்குமாறும் கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த முடிவு தொடர்பாக எதிர்வரும் 1ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தெரியப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை முடிவினை அறிவிக்காத நிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.