ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இலங்கைக்கு மேற்கொண்டுள்ள திடீர் பயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் நேற்று தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார்.
தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம், தேர்தல் புறக்கணிப்பு கோஷம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து வெளியிட்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து தான் எதனையும் கூறப்போவதில்லை எனவும், இருப்பினும் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்துநின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்று தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு, இலங்கைத் தமிழரசுக்கட்சியை சேர்ந்த மாவை சேனாதிராஜா, எஸ்.சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும், ரெலோவின் சார்பில் செல்வம் அடைக்கலநாதனுக்கும், புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் செல்வராஜா கஜேந்திரனுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.
சந்திப்பில் சிறிதரன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் மட்டும் கலந்து கொண்டிருந்தனர்.
வெளிநாட்டுப் பயணமொன்றுக்குச் செல்ல வேண்டியிருந்ததன் காரணமாக, சந்திப்பின் தொடக்கத்திலேயே சிறிதரன் வெளியேறினார்.
அதேவேளை, கொழும்பில் நேற்று மலையக தமிழ் அரசியல் பிரதிநிதிகளையும், பிரதமர் தினேஸ் குணவர்த்தன உள்ளிட்டவர்களையும் அஜித் டோவல் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.