ஐ. நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான தீர்மானம், வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக, 51 ஆவது கூட்டத்தொடரின் தீர்மானத்தின் மீதான ஆணையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஒரு வருட காலஅவகாசம் அளிக்கும் வகையில், A/HRC/57/L.1 தீர்மான வரைவு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வரைவு நேற்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சாட்சியங்களைச் சேகரிக்கும் ஐ.நா அலுவலகத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, பேரவையின் 58ஆவது கூட்டத்தொடரில் வாய்மொழி அறிக்கையையும், 60ஆவது கூட்டத்தொடரில், விரிவான அறிக்கையையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை நிராகரிப்பதாக பேரவையில் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.