குர்துப் பெண்ணான பஹார் யால்சின்காயா, ஓகஸ்ட் 4 ஆம் திகதி சூரிச்சின் ஹின்டரெக் நகரில் உள்ள நாடு கடத்தும் மையத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு துருக்கிக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், இஸ்தான்புல் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு முந்தைய தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றத்தினால் உத்தரவிட்டப்பட்டுள்ளதாக அவரது சட்டப் பிரதிநிதி முராத் ஓஸ்டன் தெரிவித்துள்ளார்.
ஓஸ்டனின் கூற்றுப்படி, சுவிட்சர்லாந்தில் பிறந்த அவரது 15 மாதக் குழந்தை, அவருடன் சிறையில் உள்ளது. அவரது ஐந்து வயது மகள் தற்போது எங்கு இருக்கிறார் என்பது அந்த வழக்கறிஞருக்கும் சட்டப் பிரதிநிதிக்கும் தெரியவில்லை. அந்தச் சிறுமி தனது தாயிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யால்சின்காயா “ஒரு பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ததற்காக” துருக்கிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறார். இந்த விசாரணை பல சமூக ஊடகப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டது.
துருக்கிய விசாரணைக் கோப்புகளில், PKK நிறுவனர் அப்துல்லா ஓசலானின் தனிமைப்படுத்தலைக் குறித்த விமர்சனம், குர்திஷ் புத்தாண்டு (நவ்ரோஸ்) வாழ்த்துக்கள், இலக்கிய மேற்கோள்கள் மற்றும் ரோஜாவாவில் ISIS-க்கு எதிராகப் போராடிய குர்திஷ் பெண்களின் படங்கள் ஆகியவை அடங்கும்.
புகலிடம் குறித்த எதிர்மறையான முடிவுக்கு முன்பே அவர் அனைத்து துருக்கிய நீதிமன்றக் கோப்புகளையும் SEM-க்கு அனுப்பியிருந்தார். அவற்றில் யால்சின்காயாவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையும் அடங்கும். எனவே ஓஸ்டன் கூறுகிறார்: “பயங்கரவாதப் பிரச்சாரக் குற்றச்சாட்டுகளின் பேரில் திருமதி யால்சின்காயாவுக்கு எதிராக துருக்கியில் குற்றவியல் நடவடிக்கைகள் நிலுவையில் இருப்பதை SEM அறிந்திருந்தது.”
தரவுப் பாதுகாப்பு காரணங்களுக்காக, பிடியாணை உண்மையில் கோப்புகளின் ஒரு பகுதியாக இருந்ததா என்பது குறித்து கருத்து தெரிவிக்க SEM மறுத்துவிட்டது. அனைத்து சமர்ப்பிப்புகளும் கூட்டாட்சி நிர்வாக நீதிமன்றத்தின் சட்டக் கோட்பாடுகளின்படி தனித்தனியாக மதிப்பாய்வு செய்யப்படுகின்றன என்று அது வெறுமனே கூறியது.
குடியேற்றத்திற்கான மாநில செயலகம் (SEM), நவம்பர் 2024-ல் கூட்டாட்சி நிர்வாக நீதிமன்றம் வழங்கிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைக் குறிப்பிடுகிறது, அது பின்னர் பல தீர்ப்புகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பின்படி, சம்பந்தப்பட்ட நபர் தனது சொந்த நாட்டில் சித்திரவதை அல்லது மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தையை எதிர்கொள்கிறாரா என்பதைத் தீர்மானிக்க ஒவ்வொரு நாடு கடத்தல் வழக்கும் ஆராயப்படுகிறது.
இதற்கு வலுவான காரணங்கள் இருந்தால், நாடு கடத்தல் மேற்கொள்ளப்படாமல் போகலாம். இல்லையெனில், அது அனுமதிக்கப்படுகிறது. அவரது சட்டப் பிரதிநிதியின் கூற்றுப்படி, யால்சின்காயாவுக்கு எதிரான புகலிட முடிவு மே 2026-ல் கூட்டாட்சி நிர்வாக நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.
மூலம்- 20min


