இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் உடல் இன்று தீயுடன் சங்கமமாகியது.
கடந்த 29ஆம் திகதி மறைந்த மாவை சேனாதிராஜாவின், உடல் மாவிட்டபுரத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில் சமயக் கிரியைகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து 10.30 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையில் அஞ்சலிக் கூட்டம் இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீநேசன், குகதாசன், மனோ கணேசன், ரிஷாட் பதியுதீன், வஜிர அபேவர்த்தன, ஜீவன் தொண்டமான் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் ஜெயசேகரம், பரம்சோதி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் போன்ற பலரும், மாவை சேனாதிராஜாவின் நினைவுகளைப் பகிர்ந்து அஞ்சலி உரை நிகழ்த்தினார்கள்.
இதையடுத்து,பிற்பகல் 2 மணியளவில், இறுதி ஊர்வலம் ஆரம்பமாகி,தச்சன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இறுதிச்சடங்கில் பெருந்திரளான தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.