வவுனியா புளியங்குளம் பகுதியில் மனைவியை கொலை செய்து, அவரது தலையுடன் கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இன்று காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர், கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும், அவரை கொலை செய்து காட்டுப்பகுதியில் உடலை விட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் குறித்த நபரை உடனடியாக கைது செய்துள்ளனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கொலைசெய்யப்பட்ட பெண்ணின் உடல் சின்னபூவரசன்குளம் காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
அனந்தர்புளியங்குளம் -நொச்சிகுளத்தை சேர்ந்த 32 வயதுடைய கர்ப்பிணியான ஆசிரியையே கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் வவுனியா வடக்கு பகுதியில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் ஆரம்ப பிரிவிற்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியையாக பணியாற்றுகிறார்.
கணவன், மனைவிக்கு இடையில் நீண்டநாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் இன்றுகாலை நொச்சிகுளம் பகுதியில் இருந்து கணவனும், மனைவியும் மோட்டார் சைக்களில் புளியங்குளம் நோக்கி சென்றபோதே, அவரைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்த கணவன், சின்னப்பூவரசன்குளம் காட்டுப்பகுதியில் வைத்து கொலை செய்ததாக தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தரே கொலையை செய்ததாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.