ஈரானின் அணுசக்தி மற்றும் இராணுவ நிலைகள் மீது இஸ்ரேல். பாரிய தாக்குதலை தொடங்கியுள்ளது.
ஒப்பரேசன் ரைசிங் லயன் என்ற பெயரில் இன்று அதிகாலை 4 மணியளவில் இஸ்ரேலின் இந்த தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெஹ்ரானில் உள்ள புரட்சிகர காவல்படையின் தலைமையகம், நடான்சில் உள்ள அணுசக்தி மையம் உள்ளிட்ட பல்வேறு இலக்குகளை இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்கியுள்ளன.
இந்த தாக்குதல்களில் ஈரானின் உயர்திறன் கொண்ட புரட்சிகர காவல்படையின் தளபதியான ஜெனரல் ஹுசைன் சலாமி மற்றும் ஈரானின் முக்கியமான இரண்டு அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர் என்று ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானின் முக்கியமான அணுசக்தி ஆய்வுகூடங்கள், அணு ஆயுத உற்பத்தி மையங்கள், முக்கியமான இராணுவ இலக்குகள் ஆகியவற்றை தாக்கி அழிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சில நாட்கள் நீடிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அதேவேளை இஸ்ரேலின் இந்த தாக்குதலில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் கடுமையான பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மத்திய கிழக்கில் பதக்க நிலை தீவிரம் அடைந்துள்ளது.
ஈரான் தனது வான் பரப்பில் விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்துள்ளது.
தெஹ்ரான் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை 8 சதவீதம் உயர்ந்துள்ளன.
தற்போது மீண்டும் தெஹ்ரானில் குண்டுச் சத்தங்கள் கேட்பதாக பிந்திய தகவல்கள் கூறுகின்றன.
இந்த தாக்குதல்களுக்காக, அமெரிக்காவும் இஸ்ரேலும் கடுமையான விலை கொடுக்க நேரிடும் என்று ஈரானின் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.