-2.4 C
New York
Wednesday, December 31, 2025

காசாவில் காயமடைந்த 7 பலஸ்தீன குழந்தைகள் சிகிச்சைக்காக சுவிஸ் அழைத்து வரப்பட்டனர்.

காசாவில் காயமடைந்த ஏழு பலஸ்தீன குழந்தைகள் ஜோர்டானில் உள்ள அம்மானில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு சுவிஸ் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும் என்று அரச குடியேற்ற செயலகம் (SEM) தெரிவித்துள்ளது.

புதன்கிழமை குழந்தைகள் காசா பகுதியில் இருந்து ஜோர்டானுக்கு மாற்றப்பட்டனர். அவர்கள் நேற்றுக் காலை நான்கு ரெகா மற்றும் இரண்டு சுவிஸ் இராணுவ விமானங்களில் சுவிட்சர்லாந்திற்கு பறந்தனர்.

இந்த விமானங்கள் சூரிச், ஜெனீவா மற்றும் லுகானோ விமான நிலையங்களில் தரையிறங்கியுள்ளன.

குழந்தைகள் மோதல் தொடர்பான காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மருத்துவ பராமரிப்பு தேவை என்று SEM தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு ஜெனீவா, வௌட், டிசினோ, பாசல் நகரம், லூசெர்ன் மற்றும் சென் காலன் ஆகிய பல்கலைக்கழக மற்றும் கன்டோனல் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும். இரண்டு குழந்தைகளுக்கு சென் காலன் நகரில் சிகிச்சை அளிக்கப்படும்.

இந்த மனிதாபிமான நடவடிக்கையை சுவிஸ் மத்திய அரசு மற்றும் கன்டோன்களின் பல்வேறு துறைகள் இணைந்து தயாரித்துள்ளன. இது உலக சுகாதார அமைப்பு (WHO), மெடெசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் (MSF) மற்றும் சுவிஸ் விமான மீட்பு சேவையான ரெகா ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.

SEM இன் படி, குழந்தைகள் மற்றும் அவர்களுடன் வந்த 27 குடும்ப உறுப்பினர்கள் சுவிட்சர்லாந்திற்கு புறப்படுவதற்கு முன்பு அதிகாரிகளால் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் புகலிட நடைமுறை திறக்கப்படும்.

உடன் வருபவர்கள் குழந்தைகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளுக்கு அருகிலுள்ள SEM அல்லது கன்டோனல் தங்குமிடத்தில் தங்க வைக்கப்படுவார்கள்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles