14 C
New York
Saturday, March 21, 2026

யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட பெண் விரிவுரையாளர் மகளின் காதலனால் கொலை.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவபீட மூத்த விரிவுரையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது சடலம் தனங்கிளப்பு காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

அரியாலை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் தயாளினி திலீபன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சில தினங்களுக்கு முன்னர், தனது தாயாரையும் சகோதரியையும் காணவில்லை என விரிவுரையாளரின் மகன் யாழ்ப்பாணக் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை முடுக்கிவிட்ட காவற்துறையினர், காணாமல் போன விரிவுரையாளரின் 19 வயது மகளும் அவரது காதலனான 21 வயது இளைஞன் ஒருவரும் திருகோணமலை பகுதியில் இருப்பதைக்கண்டு பிடித்தனர்.

அங்கிருந்து அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் போது, விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டமை அம்பலமானது.

குறித்த விரிவுரையாளரைத் தான் கொலை செய்து, சடலத்தைத் தனங்கிளப்பு பகுதியில் உள்ள காட்டுக்குள் வீசியதாக அந்த இளைஞன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இன்று சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் விரிவுரையாளரின் சடலத்தை மீட்டுள்ளனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணக் காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles