மட்டக்களப்பு – கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து கொண்டு உறங்கிய 19 வயது இளைஞன், கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாசிக்குடா பொலிசார் தெரிவித்தனர்.
கல்குடா கருங்காலிச்சோலை வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய கமலேஸ்வரன் சங்கீதன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
நேற்று மாலை குறித்த இளைஞன், நெஞ்சில் இருதயம் இருக்கும் பகுதியில் கையடக்க தொலைபேசியை வைத்து மின்சாரத்தின் ஊடாக சார்ஜ் செய்து கொண்டு உறங்கியுள்ளார்.
இந்த நிலையில் கையடக்க தொலைபேசியின் பற்றரி சூடாகி வெடித்ததையடுத்து படுகாயமடைந்த அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற அனுமதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


