சுவிசின் பேர்கன்ஸ்ரொக் நகரில் நடந்த உக்ரைன் அமைதி மாநாட்டில் பங்கேற்ற சுமார் 100 மாநிலங்கள் மற்றும் அமைப்புகளில், 84 நாடுகள் இணைந்து, நேற்று கூட்டுப் பிரகடனத்தை வெளியிட்டன.
இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற பிரிக்ஸ் நாடுகள் இதற்கு ஆதரவு அளிக்கவில்லை.
ஆர்மீனியா, பஹ்ரைன், பிரேசில், இந்தியா, இந்தோனேசியா, கொலம்பியா, லிபியா, மெக்சிகோ, சவுதி அரேபியா, தென்னாபிரிக்கா , சுரினாம், தாய்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளே இந்த பிரகடனத்துக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.
பிரேசில், இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா மற்றும் ரஷ்யாவை உள்ளடக்கியதாக பிரிக்ஸ் நாடுகளின் கூட்டு அமைந்துள்ளது.
இவற்றில் ரஷ்யாவுக்கு இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடப்படவில்லை. சீனா பங்கேற்கவில்லை. பிரேசில், இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்ற போதும், அவற்றின் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.
அத்துடன், உக்ரைன் உச்சிமாநாட்டில் சமாதான முன்னெடுப்புகளில் ரஷ்யாவை ஈடுபடுத்துவதற்கான தெளிவான அணுகுமுறை தொடர்பாக, மாநாட்டில் பங்கேற்ற அரசாங்கத் தலைவர்களால் உடன்பாடு ஒன்றை எட்ட முடியவில்லை.
எதிர்காலத்தில் எப்போது, எப்படி ரஷ்யா இந்தப் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என்ற கேள்விக்கு ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்று, சுவிஸ் ஜனாதிபதியாக இருக்கும் பாதுகாப்பு அமைச்சர் வயோலா அம்ஹெர்ட், நிறைவுரையில் கூறினார்.
மேலும் நடவடிக்கைகள் தேவை என்றும். சுவிட்சர்லாந்து அதன் பங்கை வகிக்க தயாராக உள்ளது எனவும் அவர், கூறினார்.
ஆங்கிலம் மூலம் – swissinfo