Konstanz இல் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் பல மில்லியன் பிராங் பெறுமதியான இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
Zollernstrasse என்ற பழைய நகரத்தில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கட்டடம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது.
பொலிசார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் வருவதற்கிடையில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டடம் முற்றாக எரிந்து போனது.
பிரபலமான தளபாட நிறுவனம் ஒன்றின் காட்சியகம் இருந்த இரண்டாவது மாடியிலேயே தீவிபத்து முதலில் ஏற்பட்டது.
அந்த கட்டடத்தில், பல குடியிருப்புகளும் அமைந்திருந்தன.
நெருப்பு மளமளவென்று இரண்டாவது மூன்றாவது மாடிகளுக்கும், தரைத்தளத்தின் முன்பகுதிக்கும் பரவியுள்ளது.
வரலாற்றுக் கட்டடங்கள் பல அமைந்திருந்த அந்தப் பகுதியில், ஏனைய கட்டடங்களுக்கும் தீ பரவாது என உறுதியாக கூற முடியாத நிலையில் அருகில் இருந்த கட்டடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் 16 பேர் காயமடைந்தனர் என்றும் அவர்களில் 7 பேருக்கு ஒரளவு காயங்கள் ஏற்பட்டதாகவும். ஒருவர் படுகாயம் அடைந்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புப் பணியில் 200இற்கும் மேற்பட்ட பொலிஸ், தீயணைப்பு மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
மூலம் – 20min