கருக்கலைப்பு தொடர்பாக தாய்மார்களுக்கு மட்டுமே சட்டப்பூர்வ உரிமை உள்ளது என்றும் பிறக்காத குழந்தையின் தந்தைக்கு உரிமை கிடையாது என்றும் சுவிஸ் பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் கர்ப்பத்தின் முதல் பன்னிரெண்டு வாரங்களில், கருக்கலைப்பு சட்டப்பூர்வமானது.
அதன் பின்னர், அவசர சூழ்நிலையில் இருப்பதாகக் கருதப்படாவிட்டால் கருக்கலைப்பு செய்தால், பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
Fribourg கன்டோனைச் சேர்ந்த ஆண் ஒருவர் தனது முன்னாள் பெண் நண்பி, குறித்த காலத்துக்குப் பின்னர் கருவைக் கலைத்து விட்டதாக வழக்குத் தொடர்ந்திருந்தார்.
குறித்த பெண் உளவியல்ரீதியாக துன்பத்துக்குள்ளாகியிருந்ததால், அவர் மீதான வழக்கை கைவிட சட்டமா அதிபர் அலுவலகம் முடிவு செய்தது.
எனினும் குறித்த நபர், சமஷ்டி நீதிமன்றத்துக்கு இந்த விவகாரத்தை எடுத்துச் சென்று, பிறக்காத கருவின் தந்தையாக, சட்டத்தின் வரையறையின் கீழ் தான் பாதிக்கப்பட்டவர் என்று வாதிட்டார்.
இந்த நிலையில், சுவிஸ் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில்,
“தாமதமான கருக்கலைப்புக்கான தடை பிறக்காத குழந்தையைப் பாதுகாக்கிறது, சம்பந்தப்பட்ட மனிதனை அல்ல.
மேலும் கருவுக்கு பிறப்பதற்கு முன் சட்டபூர்வ ஆளுமை இல்லாததால், தந்தையை பாதிக்கப்பட்டவராக கருத முடியாது.
Friborg ஐச் சேர்ந்த நபர் இதனால் புகார் அளிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளது.
மூலம் – Swissinfo