சூரிச் கன்டோனல் வங்கியை (ZKB) அச்சுறுத்தி கப்பமாகப் பணம் பெற முயன்ற நான்கு சுவிஸ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மூன்று மில்லியன் பிராங்குகள் மதிப்புள்ள 61 பிட்கொயின்களை தங்களுக்குத் தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால், வாடிக்கையாளர் தரவை வெளியிடுவோம் என்றும் வங்கிக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.
நான்கு பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் வங்கியில் பணியாற்றி வந்தவர் என்று தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள், 20 மற்றும் 21 வயதுடைய சுவிஸ் பிரஜைகள் என்றும். அவர்கள் அனைவரும் தற்போது பொலிஸ் காவலில் உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிடிபட்ட முன்னாள் ZKB ஊழியர், 2023 நவம்பர் வரை ZKBயில் இல் பணியாற்றியிருந்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடம், சட்டவிரோதமாக பெறப்பட்ட ZKB வாடிக்கையாளர்களின் 58 தரவுத் தொகுப்புகள் இருந்தன.
இந்தத் தரவுத் தொகுப்புகள் பெயர், உள் வாடிக்கையாளர் எண் மற்றும் பிறந்த திகதி ஆகியவற்றை மாத்திரம் கொண்டிருந்தன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- zueritoday