Wängiயில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று காணப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Rosental இல் உள்ள ஒரு சுய சேவைக் கடையில் ஞாயிறு இரவு இரவு 7:45 மணியளவில், சந்தேகத்திற்கிடமான பொதி வைக்கப்பட்டிருப்பதாக Thurgau கன்டோனல் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் ஒரு நபரை சோதனை செய்த போது, அவருடைய பையில் மேலும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த பொதியில் இருந்த சந்தேகத்திற்குரிய பொருட்கள் என்ன என்பதையோ, சந்தேந நபர் தனது பையில் என்ன பொருட்களை வைத்திருந்தார் என்பதையோ பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டேனியல் மெயில் தெரிவிக்கவில்லை.
அந்தப் பொருட்கள் ஆபத்தானவை என்பதை நிராகரிக்க முடியாது. அவற்றில் வெடிபொருட்கள் இருக்கலாம்” என்று அவர் கூறினார்.
அந்தப் பகுதியில் வசிக்கும் 31 வயதான போலந்து நாட்டவரே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.
சுயசேவைக் கடையைச் சுற்றியுள்ள பகுதிகள் முற்றுகையிடப்பட்டு சோதனையிடப்பட்டதுடன், தீயணைப்புப் படையினர் போக்குவரத்தைத் திருப்பி விட்டனர்.
பல குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டனர்.
சூரிச் தடயவியல் நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் பொருட்களைப் பரிசோதித்து, நள்ளிரவுக்குப் பின்னர், வெடிமருந்துகளோ மற்ற ஆபத்தான பொருட்களோ இல்லை என உறுதி செய்யப்பட்டது.
மூலம்- zueritoday