சூரிச்சிலிருந்து நியூயோர்க் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்விஸ் விமானம் LX16, நேற்று மாலை அமெரிக்காவின் மைய்ன் மாநிலத்தில் உள்ள பாங்கோர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ஸ்விஸ் விமானம் LX16, நேற்றுக்காலை 10:26 மணிக்கு சூரிச்சிலிருந்து புறப்பட்டு, நியூயோர்க்கில் உள்ள ஜோன் எஃப். கென்னடி விமான நிலையத்தில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், மெய்ன் கடற்கரையை அடைந்தவுடன், ஏர்பஸ் A330-343 விமானத்தின் பணியாளர்களால், சர்வதேச அவசரகாலக் குறியீடான 7700 பயன்படுத்தப்பட்டு, பாங்கோர் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானத்தைத் திருப்பிவிடக் கோரப்பட்டது.
விமானம் பாங்கோரில் பாதுகாப்பாகவும், வேறு எந்தச் சம்பவமும் இன்றித் தரையிறங்கியதாக, ஸ்விஸ் நிறுவனம் திங்கட்கிழமை மாலை உறுதிப்படுத்தியது.
பல சுவிஸ் ஊடகங்கள் இந்தச் சம்பவம் குறித்து முன்னதாகவே செய்தி வெளியிட்டிருந்தன. வணிக வகுப்பின் முன்பகுதியில் தெளிவற்ற புகை உருவானதே விமானம் திருப்பி விடப்பட்டதற்குக் காரணம் என்று அந்த அறிக்கை தொடர்ந்தது.
விமானம் தரையிறங்கும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளூர் தீயணைப்புத் துறை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக ஸ்விஸ் நிறுவனம் கூறியது.
விமானம் தரையிறங்கிய பிறகு தீயணைப்பு வீரர்கள் விமானத்தை ஆய்வு செய்தபோது, தீ அல்லது வெப்பத்திற்கான எந்த அறிகுறிகளையும் காணவில்லை. புகை உருவானதற்கான காரணத்தை இன்னும் உறுதியாகக் கண்டறிய முடியவில்லை. நிபுணர்கள் தற்போது விமானத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
208 பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாகவும் நலமாகவும் உள்ளனர். விமான நிறுவனம் தற்போது பயணிகளைக் கவனித்து வருவதுடன், அவர்களின் அடுத்தகட்ட பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மூலம்- bluewin


