20.9 C
New York
Friday, June 27, 2025

வரலாறு காணா வேட்புமனுக்கள்.

எதிர்வரும் நொவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள  பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களில் 690 குழுக்கள் போட்டியிடுவதாக  தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த பின்னர், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை அறிவித்துள்ளார்..

போட்டியிடுவதற்கான சமர்ப்பிக்கப்பட்ட 74 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையாக 64 அரசியல் குழுக்கள் போட்டியிடுகின்றன.

மொனராகலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையில், தலா 15 அணிகள் போட்டியிடுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்குக் கட்சிகள், சுயேச்சைக்குழுக்கள் சார்பில் 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதில் ஒரு கட்சி 6 சுயேச்சை குழுக்கள் என 7 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

22 கட்சிகள் 27 சுயேச்சைக்குழுக்கள் என  49 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் 392 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகள், 17 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தன.

அவற்றில் 17 அரசியல் கட்சிகள், 14 சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள்  ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தேசிய ஜனநாயக முன்னணி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய தேசிய சுதந்திர கூட்டமைப்பு  ஆகிய மூன்று கட்சிகள்,  மற்றும் மூன்று சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 24 அரசியல் கட்சிகளும் 27 சுயேட்சைக் குழுக்கள் என மொத்தமாக 51 குழுக்கள் வேட்பு மனுக்களை கையளித்திருந்தன.

அவற்றில் 2 அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயேட்சை குழுக்களினது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

எங்கள் மக்கள் சக்தி மற்றும் சிறிரெலோ கட்சியின் ப. உதயராசா போட்டியிடவிருந்த ஜனநாயக தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

47 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுத்தேர்தலில் 6 நாடாளுமன்ற ஆசனங்களுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 423 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 46 வேட்புமனுக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் கையளிக்கப்பட்ட நிலையில் இரண்டு சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதையடுத்து,  44 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியில் இருக்கின்றன.

Related Articles

Latest Articles